Wednesday, October 11, 2006

ஆனாலும்...

வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில்
நீ வந்த போது
எனக்கொன்றும் தெரியவில்லை.

வீதியின் புழுதி படர்ந்த தெருக்களில்
ஓடிப்பிடித்து விளையாடிய போது
அவ்வளவாய் விவரமில்லை.

தொட்டாங்குச்சி நாட்களில்
முள்மர இலைகள் சோறானபோது
நடைமுறைகள் ஞாபகமில்லை.

என்னுடன் உன்னை விளையாட
வேண்டாமென்று உன் அம்மா தடுத்தபோது
எனக்கொன்றும் புரியவில்லை.

என் துணையுடனே நீ வந்து
கல்லூரி முடித்த போதும்
நமக்குள்ளே நட்புமில்லை.

இருந்த காசெல்லாம் போட்டு
உன் திருமணத்திற்கு வந்த என்னை
நீ பார்க்கக் கூட நேரமில்லை.

ஒரே வீதியில் அரை நூற்றாண்டு வாழ்க்கையில்
என் மகனுடன் உன் பேரனை
கூட்டி வரும் போதும் உன்னிடம் புன்னகையில்லை.

சந்தர்ப்ப வசமாய் உனக்குதவ
நேரிடும் போதும் உன்னிடத்தில்
பெரியதொரு சந்தோசமில்லை.

எப்படியிருந்து பார்த்தாலும்
என் மனைவியைவிட நீ
அப்படியொன்றும் அழகில்லை.

ஆனாலும்

எனக்கு ஏனோ உன்னை
பிடித்திருக்கிறது என்றுதான்
எனக்கும் புரியவில்லை!!!

2 Comments:

At 1:01 AM, Anonymous Anonymous said...

so sweet

 
At 1:01 AM, Anonymous Anonymous said...

so sweet

 

Post a Comment

<< Home