பிடிக்கும் என்பதால் பிடிக்கும்
வெய்யிலோடு பெய்யும் மழையில்
நனைந்திருப்பதும் பிடிக்கும்
வெண்ணிலவோடு வழியும் இரவில்
விழித்திருப்பதும் பிடிக்கும்
கள்ளிப்பூக்களைப் பார்த்துக் கொண்டே
கவிதை படிப்பதும் பிடிக்கும்
கண்களை திறந்து கொண்டே
கனவு காண்பதும் பிடிக்கும்
இமைகளின் முடிகள் எத்தனையென்று
எண்ணிப்பார்ப்பதும் பிடிக்கும்
இதயத்தின் ஓசையை இசையில்லாமல்
கேட்டுக்கொண்டிருக்கவும் பிடிக்கும்
ஆழ்கடலின் ஆழத்தை விரல்களினால்
அளந்து பார்க்கவும் பிடிக்கும்
அவசரமாய் மறையும் சூரியனை
அசையாமல் பார்க்கவும் பிடிக்கும்
நட்சத்திரங்களை நாள்தோறும்
நலம் விசாரிப்பதும் பிடிக்கும்
நகர்ந்து போகும் சாயங்கால மனிதர்களுடன்
நேரம் கடத்துவதும் பிடிக்கும்
நாள் முழுக்க சிரித்துக்
கொண்டே இருக்கவும் பிடிக்கும்
நகக் கண்களில் அந்த முகம்
பார்த்துக் கொண்டிருக்கவும் பிடிக்கும்
ஒற்றை மழைத்துளி நெற்றிப்பொட்டினில்
சட்டென விழுவதும் பிடிக்கும்
கற்றைக் கூந்தலில் வெண்ணிற மல்லிகை
நெளிந்து புரள்வதும் பிடிக்கும்
மழைத்துளியினால் பிறக்கும் மண்வாசம்
சுவாசிக்கும் நெஞ்சமும் பிடிக்கும்
சிறு உளியினால் பிறக்கும் பொன்சிலை
பார்க்கும் கண்களும் பிடிக்கும்
வந்தே மாதரம் கேட்கும் போதெல்லாம்
சிலிர்க்கும் முடிகளும் பிடிக்கும்
வணக்கம் என்று இனிதாய் சொல்லும்
என் மனிதனின் மொழியும் பிடிக்கும்
வாழ்க்கையின் ஒரத்தில் பயணம்
செய்து பார்ப்பதும் பிடிக்கும்
வசந்ததின் நிழலில் நான் மட்டும்
தனியாய் வாழ்ந்து பார்ப்பதும் பிடிக்கும்.
-பிப்ரவரி 1999
0 Comments:
Post a Comment
<< Home